அது ஒரு ஆச்சரியம் தரும் சந்தோசமான மின்மடல் அழைப்பு. எனது மின்னஞ்சல் பெட்டியில் தமிழ்மண நட்சத்திர நிர்வாகி என்ற முகவரியுடன் காணக் கிடைத்தது. தமிழ்மண உதவிப்பக்கம்மூலம் வலைப்பூ உருவாக்கிய எனக்கு குறுகிய காலத்தில் கிடைத்த நல்லதொரு அங்கீகாரமிது. தமிழ்மண நிர்வாகிகளுக்கும், சகபதிவர்களுக்கும் ,வலைப்பூ வருகையாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
எனக்கும் இணையத்துக்குமான உறவு யாழ் பல்கலைக்கழக காலத்தில் ஆரம்பித்தது. அப்போதெல்லாம் எனக்கு இணையம் ஒரு செய்தி ஊடகமாகவே அறியப்பட்டிருந்தது (அடிபாடு {சண்டை} நடந்தால் ஓடிப்போய் எல்லோருமாகப் பார்ப்போம்) இருந்தும் பின்னாளில் சாதாரண இணையப்பக்கங்கள் பார்வைக்கு கிடைக்கத்தொடங்கிய வேளையில் (கவிதை சம்பந்தமான) நாமும் இதுபோல ஒரு வலைப்பூ தொடங்கலாமே எனச் சின்னதாய்ஆசையொன்று மனதில் துளிர்விடும். ஆனாலும் கணிணி பற்றிய அடிப்படைக்கு குறைவான அறிவும், வலைத்தளம் உருவாக்கவும் அதை தொடர்ந்து செயற்படுத்தவும் நிறையச் செலவாகுமென்ற பயமும் எனது வலைப்பூக்கான முயற்சிகளைக் கிடப்பில் போட்டிருந்தது. பின்னாளில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை, கல்விக்கான எனது போராட்டம் என்பவற்றில் வலைப்பூ ஆசைகள் அடிபட்டுப்போனது.
என்னுடைய எண்ணங்களைக் கவிதையாக எழுதிவைத்திருக்கிறேன். பெரும்பாலும் நான்வாழும் சூழலது சமகால மாற்றங்களை எழுத்துருவாக்க முனைகின்றேன். முழுமையான சுதந்திரத்துடன் எனது எண்ணங்களைப் பிரசுரிக்கிறேன் என பொய்சொல்ல முடியவில்லை. நானாக வகுத்துக்கொண்ட சில மட்டுறுத்தல்களுடன் வலைநாடி வருகிறது என் பகிர்வுகள். நீங்களதைக் கவிதையாக ஏற்றுக்கொண்டால் சந்தோசம், இல்லையென்றாலும் காரியமில்லை அது ஒரு கருத்துப்பகிர்வாகவேனும் இருக்குமல்லவா?
வலைக்கு வந்த புதிதிலேயே நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். வரும் நாட்களும் வளமானவையாக அமையுமென்ற நம்பிக்கையோடு இந்த நட்சத்திர வாரத்திலும் வழமைபோல பதிவிட உத்தேசித்திருக்கிறேன்.
மீண்டுமொருமுறை
தமிழ்மணத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
தமிழ்மணத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
நன்றி அண்ணா உங்கள் தகவலுக்கு! எனக்கும் மிக நீண்ட நாட்களாக ஒருவலை தளம் உருவாக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் உங்களைப்போன்றே அதே பயம் எனக்கும் இப்போதுவரைக்கும் உண்டு. தற்போது அது உங்களால் நீங்கி இருக்கிறது. இருந்தாலும் உங்கள் உதவி எனக்கு தேவை. அப்படி ஒரு வலைதளம் எனக்காக உருவாகுமானால் அதற்க்கான முன்னோடி நிச்சயமாக நீங்கள்தான். அத்தோடு அதில் உங்கள் சாயலும் இருக்கும். இது தொடர்பான மேலதிக தவல்களை எனக்கு தரமுடியுமா?
ReplyDeleteநன்றி
-திருமலை விக்னா-